மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சுமார் 15,000 சொகுசுக் கப்பல் பயணிகளும், 20,000 ஊழியர்களும் நடுக்கடலில் சிக்கியிருப்பதாக சர்வதேச கடல்துறை அமைப்பு (IMO) தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை, ஓமான் வளைகுடா மற்றும் பெர்ஷிய வளைகுடா ஆகியவற்றை “போர் நடக்கும் பகுதிகளுக்கு இணையானவை” என கடல்துறை வகைப்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28 முதல் இதுவரை 7 கப்பல் தொடர்பான தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர், 7 பேர் காயமடைந்துள்ளனர்.
உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20% செல்லும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் கிட்டத்தட்ட முழுமையாக மூடிவிட்டது. இதனால் கடந்த ஒரு வாரத்தில் இப்பகுதி வழியே செல்லும் எண்ணெய் கப்பல்களின் எண்ணிக்கை 90% குறைந்துள்ளது.
மெர்ஸ்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் இப்பகுதிக்கான முன்பதிவுகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
“இது ஒரு பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல, அப்பாவி ஊழியர்கள் பாதிக்கப்படும் மனிதாபிமானப் பிரச்சினையும் கூட” என்று IMO பொதுச்செயலாளர் அர்செனியோ டொமிங்குவேஸ் கவலை தெரிவித்துள்ளார்.





















