மலேசிய எல்லைப்பகுதியில் அதிரடி வேட்டை: தும்பாட், பாசிர் மாஸில் 22 சட்டவிரோதக் குடியேறிகள் கைது! தலா RM8,000 கொடுத்து ஊடுருவல்

தும்பாட் | ஏப்ரல் 6, 2026

கிளந்தான் மாநிலத்தின் தும்பாட் (Tumpat) மற்றும் பாசிர் மாஸ் (Pasir Mas) ஆகிய பகுதிகளில் பொதுப் பாதுகாப்புப் படையினர் (GOF) நடத்திய இரு வேறு அதிரடி சோதனைகளில், முறையான ஆவணங்களின்றி மலேசியாவிற்குள் நுழைந்த 22 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையில் 20 மியன்மார் நாட்டவர்கள் மீட்கப்பட்டதாக பொதுப் பாதுகாப்புப் படையின் தென்கிழக்கு மண்டலத் தளபதி சீனியர் அசிஸ்டண்ட் அஹ்மத் ராட்ஸி ஹுசைன் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 4) மதியம் 1:15 மணியளவில் தும்பாட், சாபாங் எம்பாட் (Chabang Empat) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

அந்த வீட்டின் வரவேற்பறையில் பதுங்கியிருந்த 14 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் என மொத்தம் 20 மியன்மார் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மியன்மாரிலிருந்து தாய்லாந்து வழியாக, ஆற்றுப் பாதையைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மலேசியாவிற்குள் நுழைந்துள்ளனர். மலேசியாவில் கட்டுமானத் தொழிலாளர்களாகப் பணிபுரிய ஏஜெண்டுகளுக்குத் தலா 8,000 ரிங்கிட் வரை பணம் கொடுத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேநேரம் இதற்கு முன்னதாக, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) மாலை 6:15 மணியளவில் பாசிர் மாஸ், ரந்தாவ் பாஞ்சாங் பகுதியில் மற்றொரு சோதனை நடைபெற்றது, அதில் இரு தாய்லாந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர் என்று அவர் மேலும் கூறினார்.

அவர்களிடம் முறையான பயண ஆவணங்கள் இல்லை. இவர்கள் 2024-ஆம் ஆண்டு முதல் ஜோகூர், பாசிர் கூடாங் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல்காரர்களாகப் பணியாற்றி வருவதாக ஒப்புக்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் குடிநுழைவுச் சட்டம் 1959/1963-இன் கீழ் மேலதிக விசாரணைக்காக அந்தந்த மாவட்டக் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். எல்லைப் பகுதிகளில் மனிதக் கடத்தல் கும்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கப் பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here