கோலாலம்பூர்:
சரவாக் மாநிலத்தின் மருடி, சுங்கை ரிடான் (Sungai Ridan) பகுதியில் மீன்பிடிக்கச் சென்றபோது மாயமான 64 வயது முதியவர், முதலைத் தாக்குதலால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
லியூ மே கூன் (Liew Mei Koon) என அடையாளம் காணப்பட்ட அந்த முதியவரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புக் குழுவினர், இன்று காலை 10:52 மணியளவில் அவரது தலை, இரண்டு கால்கள் மற்றும் ஒரு கையை மீட்டனர்.
நேற்று (வியாழக்கிழமை) முதியவர் மீன்பிடிக்கச் சென்ற இடத்தில் அவரது மோட்டார் சைக்கிள், உடைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சுங்கை ரிடான் பாலத்திற்கு அடியில் கண்டெடுக்கப்பட்டன.
பாதிக்கப்பட்டவரின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், மருடி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த குழுவினர் நேற்று காலை 9:20 மணி முதல் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இன்று மாலை 4:00 மணியுடன் தேடுதல் பணி அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்யப்பட்டது.
எஞ்சிய உடல் பாகங்கள் கிடைக்காத நிலையில், மீட்கப்பட்ட பாகங்கள் மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் துயரச் சம்பவம் முதலைத் தாக்குதலால் ஏற்பட்டிருக்கக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
ஆற்றுப் பகுதிகளில் மீன்பிடிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.





















