இசைப்பயணத்தில் 50 ஆண்டுகள்: மனஅமைதியை கொண்டு வருவதே இசை – இளையராஜா

1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார். லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து புதிய சாதனை படைத்தார்.

இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த முதல் படமான ‘அன்னக்கிளி’ வெளியாகி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இசைப்பயணத்தில் 50 ஆண்டுகள் கடந்த இளையராஜாவுக்கு பல்வேறு தரப்பினர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இசை உலகில் அரை நூற்றாண்டை கடந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் இளையராஜா. இளையராஜா “வருடங்கள் தான் ஒவ்வொன்றாக நகர்ந்து செல்கிறது. நான் அப்படியேதான் இருக்கிறேன். எல்லோரும் என்னை இசை கடவுளாக பார்ப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் அவர்களுக்கு பிடித்த மாதிரி பார்க்கிறார்கள். கடவுளுக்கு, தான் கடவுள் என்ற நினைப்பு இருக்குமா? அப்படித்தான் இதுவும். அவர்கள் விருப்பம் போல பார்த்துக் கொள்ளட்டுமே… இதில் எதுவும் கூடி விடப் போவதில்லை.ரசிகர்கள் தனது அன்பை காட்டுகிறார்கள் அவ்வளவுதான்.

ஒருவனின் துக்கத்தை போக்கி ஆறுதல் தரும் ஆயுதம் ஏதாவது உண்டா… அழும் குழந்தை எனது பாடலை கேட்டு அழுகையை நிறுத்துகிறது. நான் அந்த குழந்தைக்காகவா பாட்டு போட்டேன். இல்லை. இயக்குனர் சொன்னபடி பாட்டை வடிவமைத்து தந்தேன். சுத்தமான இடத்தில் இருந்து ஸ்வரங்கள் பிறப்பதால் பாடலுக்கு வலிமை அமைந்து விடுகிறது. நான் இசையமைக்கும் போது என் மனதில் எதுவுமே இருக்காது. வெற்றிடமாக தான் என் மனதை வைத்துக் கொள்வேன்.

கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடுகிறோம். ஆனால் கற்பூரம் காட்டும்போது கூட நமது மனது எங்கோ அலைபாய்கிறது. கற்பூர ஆரத்தி காட்டும் நேரத்தில் கூட அடக்க முடியாத மனதை, ‘ஜனனி… ஜனனி…’ பாடல் கட்டுப்படுத்துகிறது. அந்த அமைதியை எனது பாடல் தருகிறது. நான் இல்லாமல் போனாலும்கூட, எனது பாடல்கள் தரும் கொண்டாட்டம் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

பல இசையமைப்பாளர்களிடம் பணிபுரிந்துள்ளேன். இதற்கிடையில் ‘அன்னக்கிளி’ படத்தில் இசையமைக்க வாய்ப்பு வந்தபோது, எப்படி இசையமைக்க போகிறேனோ… என்று குழம்பித்தான் போனேன். ‘அன்னக்கிளி உன்னை தேடுதே…’ என்ற பாடல் வரிகளுக்கு பாடல் அமைக்க யோசித்தேன். தினமும் கடற்கரையோரம் நடந்துகொண்டே யோசிப்பேன். 250 படங்களுக்கு மேல் உதவி இசையமைப்பாளராக பணியாற்றி இருந்தாலும் கூட, எனக்கென வரும்போது தனிக்காட்டில் விடப்பட்டதை போலவே உணர்ந்தேன். ஒரு ‘ஹம்மிங்’கில் இந்த பாடலை தொடங்கலாம் என்று யோசித்தேன். நடந்துகொண்டே உதித்த அந்த ‘ஹம்மிங்’கை, வீட்டுக்கு வந்ததும் ‘நோட்ஸ்’ எடுத்துக்கொள்வேன். ஒவ்வொரு ‘பேக்கிரவுண்ட் ஸ்கோரை’யும் நினைத்து நினைத்து கற்பனை செய்து ‘நோட்ஸ்’ எடுப்பேன். அதற்கு ஏற்ற தாளம், மெட்டையும் அமைப்பேன். இயக்குனர், கதாசிரியர், பாடலாசிரியர் என யாரிடமும் நான் விளக்கமும், விவரமும் கேட்டதில்லை. வரிகளை நினைத்து நினைத்து இசையமைத்தேன். அதனால் தான் அந்த பாடல்கள் இன்றளவும் உயிரோடு இருக்கிறது. விரைவில் எனது 2-வது சிம்பொனியும் வரும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here