கோலாலம்பூர்:
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செராஸ் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில், தனது சக நாட்டுத் தொழிலாளியைப் பலமுறை கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் சாட்டப்பட்ட குற்றச்சாட்டை சீன நாட்டுப் பிரஜை ஒருவர் இன்று உயர் நீதிமன்றத்தில் மறுத்து, தான் ‘குற்றமற்றவர்’ (Pleased Not Guilty) என வாதிட்டுள்ளார்.
நீதிபதி டத்தோ அஸ்லாம் ஜைனுடின் முன்னிலையில் இந்தக் கொலைக் குற்றச்சாட்டு வாசித்துக் காட்டப்பட்டபோது, 36 வயதுடைய யாங் யாஹாங் (Yang Yahong) தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.
குற்றப்பத்திரிகையின்படி, உணவகம் ஒன்றில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்த யாங் யாஹாங், கடந்த நவம்பர் 29, 2024 அன்று மாலை 4.30 மணியளவில், அதே உணவகத்தில் பணிபுரிந்த தனது சக சீன நாட்டுத் தொழிலாளியைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தண்டனைச் சட்டம் பிரிவு 302-இன் (கொலைக்குற்றம்) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு மரண தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்குக் குறையாமலும் 40 ஆண்டுகளுக்கு மிகாமலும் சிறைத்தண்டனை விதிக்கப்பட இச்சட்டம் வழிவகை செய்கிறது.
இன்றைய நீதிமன்ற விசாரணையின் போது அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் ஃபரிதா நூர்டினி பஹ்ருப் (Faridah Nurdinie Bahrum) ஆஜரானார். அதேவேளையில், குற்றம் சாட்டப்பட்ட சீனப் பிரஜை தரப்பில் இன்று எந்தவொரு வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் மறுவிசாரணைக்காக (Mention) வரும் ஜூலை 16-ஆம் தேதியை நீதிமன்றம் குறித்துள்ளது.





















