நான்காவது தேசிய விருது வென்ற மம்முட்டியை வாழ்த்திய மோகன்லால் …

நடிகர் மம்முட்டிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதற்கு மோகன்லால் வாழ்த்துகள் கூறியுள்ளார்.

2024 ஆண்டு வெளியான இந்தியத் திரைப்படங்களுக்கான 72-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், சிறந்த நடிகர் விருது மம்முட்டிக்கு கிடைத்துள்ளது. அதற்காக, மலையாளத் திரையுலகினர் அவருக்கு வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

மம்முட்டி நடித்த ‘பிரம்மயுகம்’ படத்திற்கு இரு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மம்முட்டி நடிப்பில் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் 2024 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் பிரம்மயுகம். மாந்திரீகத்தை மையமாகக் கொண்டு ஹரார் திரில்லர் பாணியில் உருவான இப்படத்தில் கொடுமன் போற்றி என்ற கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்திருந்தார். அவரது மாறுபட்ட நடிப்பு படம் வெளியானபோது பெரிதும் பேசப்பட்டது. கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் ரூ. 60 கோடிக்கும் மேல் வசூலித்து சிறந்த வெற்றியைப் பெற்றது.

2024 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பில், ‘பிரம்மயுகம்’ படத்திற்கு இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகராக மம்முட்டி ,சிறந்த ஒளிப்பதிவாளராக ஷெஹ்னாத் ஜலால் ஆகியோர் பிரம்மயுகம் படத்திற்காக தேசிய விருதை பெறுகின்றனர். மம்முட்டி சிறந்த நடிப்புக்காகப் பெறும் 4 வது தேசிய விருது இது.

இந்த நிலையில், நடிகர் மோகன்லால் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அன்பிற்கினிய இச்சாக்காவுக்கு ‘பிரம்மயுகம்’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்திருப்பதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இது நம் அனைவருக்கும் மிகுந்த பெருமையான தருணம். அவரது திறமைக்கு உரிய அங்கீகாரமாக இந்த விருது அமைந்துள்ளது. மேலும், வைக்கம் விஜயலட்சுமிக்கும் எனது வாழ்த்துகள். இது அவரது அசாதாரணமான திறமைக்குக் கிடைத்த அழகிய அங்கீகாரமாகும். இந்த உயரிய கௌரவத்தை அவர் பெற்றிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சிறந்த ஒளிப்பதிவாளராக ஷெஹ்னாத் ஜலால் தேசிய விருது பெற்றிருப்பதும், பெமினிச்சி பாத்திமா சிறந்த மலையாளத் திரைப்படமாகத் தேர்வாகியிருப்பதும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இயக்குநர் பாசில் முகம்மது மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

மேலும், கார்த்திக் ஆர்யன், யாமி கவுதம், தனுஷ் மற்றும் 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் கவுரவிக்கப்பட்ட அனைத்து கலைஞர்கள், திரைப்பட இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்தியத் திரைப்பட உலகின் செழுமை, பன்முகத்தன்மை மற்றும் சிறப்பை இவ்வாறான உயரிய மேடையில் கொண்டாடப்படுவது எப்போதும் மகிழ்ச்சியளிக்கிறது. விருது பெற்ற அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் கலைப் பயணத்தில் மேலும் பல உயரங்களை எட்ட என் இதயப்பூர்வமான நல்வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

4 தேசிய விருதுகளை பெற்ற ஒரே மலையாள நடிகர் மம்முட்டிதான். 1989ல் ஒரு வடக்கன் வீரகதை மற்றும் மதிலுகளில் நடித்ததற்காக அவருக்கு முதல் தேசிய விருது கிடைத்தது. அதனைத்தொடர்ந்து, 1994 ல் விதேயன் மற்றும் பொந்தன் மட ஆகிய படங்களில் நடித்ததற்காக தனது இரண்டாவது தேசிய விருதை வென்றார். அவரது மூன்றாவது தேசிய விருது 2000ல் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், இந்திய சட்ட நிபுணர், பொருளாதார நிபுணர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்திற்காக கிடைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here