ஜோகூர் மாநிலத் தேர்தலில் முஹிடின் யாசின் போட்டியிடப் போவதில்லை: பெரிக்கத்தான் நேஷனல் அறிவிப்பு

கோலாலம்பூர்:

வரவிருக்கும் ஜோகூர் மாநிலத்தின் 16-ஆவது சட்டமன்றத் தேர்தலில், பெர்சத்து கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான முஹிடின் யாசின் போட்டியிட மாட்டார் என்று பெரிக்கத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் ஜோகூர் மாநிலத் தலைவர் டாக்டர் சாஹ்ருடின் ஜமால் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாகோ நாடாளுமன்ற உறுப்பினரான முஹிடின் யாசின், மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்பி, தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி மட்டத்தில் இதுவரை எந்தவித ஆலோசனையும் நடத்தப்படவில்லை,” என்று தெளிவுபடுத்தினார்.

கடந்த ஜோகூர் மாநிலத் தேர்தலின்போது, தாம் ஏற்கனவே பிரதிநிதித்துவப்படுத்திய காம்பீர் சட்டமன்றத் தொகுதியில் முஹிடின் யாசின் மீண்டும் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டார். அதன் பிறகு அவர் முழுமையாகத் தேசிய அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

இந்த நிலையில், வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் அவர் மீண்டும் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பும் யூகங்களும் அரசியல் வட்டாரத்தில் பரவலாக எழுந்து வந்தன.

தற்போது பெரிக்கத்தான் நேஷனல் ஜோகூர் தலைமை விடுத்துள்ள இந்த அறிவிப்பின் மூலம், அத்தகைய யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here