கோலாலம்பூர்:
பிலிப்பைன்ஸின் மிண்டனாவ் பகுதியில் ரிக்டர் அளவில் 7.8 முதல் 7.9 வரை பதிவான மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மலேசியாவின் சபா மாநிலத்திலுள்ள தாவாவ், செம்பூர்ணா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
பிலிப்பைன்ஸின் கொரோனடால் நகருக்கு தெற்கே சுமார் 97 கிலோமீட்டர் தொலைவில், 50 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அமைந்திருந்த வேளையில், இதனால் மலேசியாவிற்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும், எனினும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், இந்த அதிர்வுகளை உணர்ந்த பொதுமக்கள் தங்களின் கருத்துக்களைத் தங்களின் அதிகாரப்பூர்வ கணக்கெடுப்புப் படிவத்தின் (https://forms.gle/XpZe1TXrfTGS8ch9A) வாயிலாகச் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
இதனிடையே, பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிறுவனம் (Phivolcs) கடலோரப் பகுதிகளில் 1 மீட்டருக்கும் அதிகமான உயரத்திற்குச் சுனாமி அலைகள் எழக்கூடும் என எச்சரித்துள்ளதோடு, அங்குள்ள சாரங்கனி பகுதியில் போலீஸ் கட்டடம் ஒன்றில் விரிசல் விழுந்ததாகவும், நில அதிர்வால் சிலர் மயக்கமடைந்ததாகவும் ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தோனேசியாவின் சுலாவெசி உள்ளிட்ட கிழக்குக் கடலோரப் பகுதிகளுக்குச் சுனாமி பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அந்நாட்டு வானிலை நிறுவனம் (BMKG) ஆராய்ந்து வரும் வேளையில், ஜப்பானும் முன்னெச்சரிக்கையாகத் தனது பசிபிக் கடலோரப் பகுதிகளுக்குச் சுனாமி ஆலோசனையை வழங்கியுள்ளது.




















