கோலாலம்பூர்:
சுங்கை பூலோ, பண்டார் ஸ்ரீ கோல்ஃபீல்ட்ஸ் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் காலை உணவுக்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது, தற்செயலாக இருமிய வாடிக்கையாளர் ஒருவரை முதியவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அரங்கேறிய இச்சம்பவம் குறித்து, அன்றைய தினம் காலை 9:20 மணியளவில் காவல்துறைக்குப் புகார் கிடைக்கப்பெற்றதாகச் சுங்கை பூலோ மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுப்ரிண்டெண்டண்ட் முகமட் ஹாஃபிஸ் முஹம்மது நூர் தெரிவித்துள்ளார்.
“பாதிக்கப்பட்ட நபர் உணவகத்தில் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஒருமுறை இருமியுள்ளார். உடனே அவர் தனது கையால் வாயை மூடியும் கொண்டுள்ளார். ஆனால், அவருக்குப் பின்னால் முகக்கவசம் (Face Mask) அணிந்து நின்றுகொண்டிருந்த, 50 முதல் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென ஆத்திரமடைந்துள்ளார். அவர் பாதிக்கப்பட்ட நபரின் இடது தாடையில் பலமாகக் குத்தியதுடன், அவரைப் பின்னுக்குத் தள்ளி, முகத்தில் அறைந்து, மிகவும் அநாகரிகமான வார்த்தைகளால் வசைபாடியுள்ளார்.”
சமூக வலைத்தளமான ‘எக்ஸ்’ (X)-இல் இத்தாக்குதல் தொடர்பான காணொளிக்காட்சி வெளியாகிப் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாக்குதலுக்கான துல்லியமான பின்னணி என்ன என்பது குறித்தும், தப்பியோடிய அந்த முதியவரை அடையாளம் காணவும் போலீஸார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அந்த நபர் உடனடியாகச் சுங்கை பூலோ மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு நேரில் வந்து தங்களது விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று முகமட் ஹாஃபிஸ் உத்தரவிட்டுள்ளார்.




















