கோலாலம்பூர்:
நாட்டின் மாமன்னர் சுல்தான் இப்ராகிம் மற்றும் பேரரசியார் ராஜா ஜாரித் சோபியா ஆகியோர் நாட்டில் உள்ள அனைத்துத் தந்தையர்களுக்கும் தங்களது நெஞ்சம் நிறைந்த தந்தையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து மாமன்னர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தரின் அதிகாரப்பூர்வ முகநூல் (Facebook) பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வாழ்த்துப் பதிவில், “ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த வலிமையின் தூணாகவும், தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வழிகாட்டியாகவும் திகழ்பவர்கள் தந்தையர்கள் ஆவர்.
அவர்களின் தியாகங்கள், அன்பு மற்றும் விலைமதிப்பற்ற வழிகாட்டுதல்களுக்கு எங்களது நன்றிகள். தந்தையின் பங்களிப்பும் அன்பும் வார்த்தைகளால் அரிதாகவே வெளிப்படுத்தப்பட்டாலும், அவை என்றும் பிள்ளைகளின் இதயங்களில் அழியாமல் நிலைத்திருக்கும்.” என்றும் மாமன்னர் தெரிவித்தார்.
அத்தோடு, மாமன்னரும் பேரரசியாரும் தங்களது மறைந்த தந்தையர்களுக்காகவும் இந்த நன்னாளில் இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.
“எங்களது மறைந்த தந்தையர்களான அல்மர்ஹும் சுல்தான் இஸ்கந்தர் மற்றும் அல்மர்ஹும் சுல்தான் இத்ரிஸ் ஷா II ஆகியோருக்கு எல்லாம் வல்ல இறைவன் தனது பேரருளை வழங்குவானாக” என்றும் அந்த வாழ்த்துப் பதிவில் அரச தம்பதியர் குறிப்பிட்டுள்ளனர்.




















