தர்மா மடானி திட்டம்: 627 இந்து ஆலயங்களுக்கு RM12.54 மில்லியன் நிதி ஒதுக்கீடு! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அமைச்சர் ஆர். ரமணன்

கோலாலம்பூர்:

மலேசியாவில் உள்ள இந்து ஆலயங்கள் அனைத்தும் உள்ளூர்ச் சமூக மேம்பாட்டு மையங்களாகத் திகழ்வதை உறுதிசெய்யும் நோக்கில், ‘தர்மா மடாணி’ (Dharma Madani) திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 627 இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு மொத்தம் 12.54 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூன்றாவது கட்டமாக, இன்று மட்டும் 168 ஆலயங்களுக்கு 3.36 மில்லியன் ரிங்கிட் நிதியுதவியை மனிதவள துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் அதிகாரப்பூர்வமாக வழங்கினார். அத்துடன், பி40 (B40) குறைந்த வருமானப் பிரிவைச் சேர்ந்த 3,612 இந்தியக் குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வி மானியத் திட்டத்திற்காகக் கூடுதலாக 8.87 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற நற்செய்தியையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான மடாணி அரசாங்கமும், மித்ரா (MITRA) அமைப்பும் இந்தியச் சமூகத்திற்கு எந்த நன்மைகளையும் செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகளும் சில தரப்பினரும் பரப்பி வரும் அவதூறுகளுக்கு இந்த நிதி ஆதாரங்கள் மூலம் அமைச்சர் முற்றுப்புள்ளி வைத்தார்.

வெறும் வெற்று வதந்திகளைப் பரப்புபவர்களுக்குத் தங்களின் இந்தத் தீர்க்கமான மக்கள் நலப்பணிகளே தகுந்த பதில் என்று குறிப்பிட்ட அவர், இந்தியச் சமூகத்தின் வாழ்வாதாரத்தையும் கல்விப் பொருளாதார வலிமையையும் உண்மையான அடித்தளத்தில் இருந்து மேம்படுத்துவதே இந்த அரசாங்கத்தின் முதன்மை இலக்கு என்றும் எளிய நடையில் தெளிவுபடுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here