கோலாலம்பூர்:
மலேசியாவில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் வரை 31,517 பேர் திவால் நிலையை எதிர்நோக்கியுள்ளதாகப் பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமட் நாசிர் தெரிவித்துள்ளார்.
இதில் 46 விழுக்காடு அல்லது 14,582 வழக்குகள் தனிநபர் கடன்களினால் ஏற்பட்டவை என்பதோடு, பாதிக்கப்பட்டவர்களில் 15 விழுக்காட்டினர் 34 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் என்பது கவலைக்குரியதாக உள்ளது.
இன்று ஜொகூர் பாருவில் நடைபெற்ற ‘இரண்டாவது வாய்ப்பு 3.0’ (DPK) திட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய அவர், கடன்பிரச்சினையில் சிக்கியவர்கள் மீண்டும் தங்கள் பொருளாதார வாழ்வைத் தொடங்க அரசாங்கம் வழிவகை செய்வதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாகத் தனித்து வாழும் பெற்றோர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர், நிதி மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்ட வீட்டுத் திட்டங்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகிய நான்கு முக்கியப் பிரிவினரை இலக்காகக் கொண்டு இந்த ‘விரைவு விடுதலை’ (Fast Track Release) நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
திவால் நிலை என்பது வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்ல, அது ஒரு குடும்பத்தின் கௌரவம் சார்ந்தது என்பதால், பாதிக்கப்பட்டவர்கள் திவால் துறையினரின் வழிகாட்டல்களைப் பெற்று புதிய வாழ்வைத் தொடங்க முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.




















