இன்னும் ஐந்து ஆண்டுகள் வாய்ப்பு தாருங்கள்; ஜோகூரை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்வேன் இந்தியர்களின் ஆதரவே வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தி – மனமுருகி வேண்டுகோள் விடுத்தார் ஒன் ஹஃபிஸ்

(கோகி கருணாநிதி)

ஜோகூர் பாரு:

ஜோகூரின் வளர்ச்சிப் பயணம் இன்னும் பாதியில்தான் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் அமைத்த வலுவான அடித்தளத்தின் மீது மேலும் உயரங்களை அடைய வேண்டுமானால், அதற்கு தொடர்ச்சியான தலைமையும், மக்களின் நம்பிக்கையும் அவசியம். எனக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் வாய்ப்பு அளியுங்கள்; ஜோகூரை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்வேன்.”

ஜோகூர் மாநிலத்தின் 16-ஆவது சட்டமன்றத் தேர்தலின் இறுதிக்கட்ட பிரசாரத்தை முன்னிட்டு மந்திரி பெசாரும், தேசிய முன்னணியின் மாநிலத் தலைவருமான ஒன் ஹஃபிஸ் காஸி, மக்களிடம், குறிப்பாக இந்தியச் சமூகத்தினரிடம் உருக்கமான வேண்டுகோளை முன்வைத்தார்.

கடந்த சில ஆண்டுகளில் ஜோகூர் மாநிலம் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, முதலீடு, வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் மக்கள் நலன் ஆகிய அனைத்துத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

நாட்டிலேயே அதிகபட்சமாக எட்டு விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை ஜோகூர் பதிவு செய்திருப்பதோடு, 110 பில்லியன் மதிப்பிலான முதலீடுகளையும் மாநிலம் ஈர்த்துள்ளது என்றார். கடந்த ஆண்டு மட்டும் 25,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதுடன், அவற்றில் சுமார் 9,000 வேலைகள் உயர்ந்த சம்பளத்துடன் கூடிய தரமான வேலைவாய்ப்புகளாக அமைந்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.

அதேவேளை, மாநில அரசின் வருவாய் 2.6 பில்லியனாக உயர்ந்திருப்பதையும் சுட்டிக்காட்டிய அவர், அந்த வருவாய் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட்டதாக விளக்கினார். கல்வி, மக்கள் நலன், அடிப்படை வசதிகள், சாலைகள், பொதுச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஜோகூர் பாரு பகுதி மட்டுமின்றி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்துவமான பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மூவாரில் கடல்சார் எரிசக்தி மையம், செடானாவில் வேளாண்மை மேம்பாடு, மெர்சிங்கில் சுற்றுலா மற்றும் மீன்பிடித் துறை, தஞ்சோங் பியாயில் ஜோகூர்–சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டல வளர்ச்சி ஆகியவை அதற்கான எடுத்துக்காட்டுகள் என்றார்.

“வளர்ச்சி ஒரு பகுதியிலேயே குவிக்கப்பட்டதாகக் கூறுவது உண்மையல்ல. ஒவ்வொரு மாவட்டமும் அதன் தேவைக்கும், திறனுக்கும் ஏற்ப வளர்ச்சி திட்டங்களின் பயனைப் பெற்று வருகிறது,” என்று அவர் வலியுறுத்தினார்.

தேசிய முன்னணி இன அரசியலை ஒருபோதும் கடைப்பிடிக்கவில்லை என்றும், தாம் எந்த இனத்தையும் பாகுபாடு காட்டும் தலைவரல்ல என்றும் ஒன் ஹஃபிஸ் தெளிவுபடுத்தினார்.

“எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதே எங்களின் கொள்கை. உதவி வழங்கும்போதும் அனைத்து சமூகத்தினருக்கும் சமமாகவே வழங்குகிறோம். இந்தியச் சமூகத்திற்காக கோயில் பிரச்சினைகள், கல்வி, மக்கள் நலன், இறப்புச் சடங்கு உதவிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இனியும் இதைவிட அதிகமாகச் செய்வோம்,” என்றார்.

இந்தியர்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக இல்லாவிட்டாலும், பல முக்கிய தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர் என்று குறிப்பிட்ட அவர், இந்திய வாக்காளர்களின் ஆதரவு தேசிய முன்னணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

“எனது தலைமையையும், தேசிய முன்னணி வேட்பாளர்களையும் மீண்டும் ஆதரிக்குமாறு இந்தியச் சமூகத்திடம் மனப்பூர்வமாகக் கேட்டுக்கொள்கிறேன். இன்னும் ஐந்து ஆண்டுகள் வாய்ப்பு அளித்தால், மக்கள் ஏமாற்றமடைய மாட்டார்கள் என்பதை நான் செயலால் நிரூபிப்பேன்,” என்று உறுதியளித்தார்.

எதிர்க்கட்சிகள் வளர்ச்சி, முதலீடு, வேலைவாய்ப்பு போன்ற மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்வைக்காமல், தனிநபர் தாக்குதல்களும் வெறுப்பைத் தூண்டும் அரசியலையும் முன்னிறுத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

“எங்களிடம் ஜோகூர் 2030 தொலைநோக்கு திட்டமும், ஜோகூர் பொருளாதார மாற்றுத் திட்டமும் உள்ளன. திட்டமிட்ட வளர்ச்சிப் பாதையில் ஜோகூர் முன்னேறி வருகிறது. இதைத் தொடரச் செய்வதா, அல்லது அரசியல் குழப்பத்திற்குள் மீண்டும் தள்ளுவதா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்,” என்றார்.

அதேவேளை, மத்திய அரசின் சில கொள்கைகள் மக்களுக்குச் சுமையாக அமைந்துள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்தார். குறிப்பாக வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான இரண்டு விழுக்காடு ஊழியர் சேமநிதி (EPF) பங்களிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றார்.

“இந்த மாநிலத் தேர்தல் மத்திய அரசை மாற்றாது. ஆனால், மக்களுக்குச் சுமையாக இருக்கும் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற வலுவான செய்தியை அனுப்பும் வாய்ப்பாக இது அமையும்,” என்று அவர் கூறினார்.

இறுதியாக, “ஜோகூரின் முன்னேற்றத்திற்காக எனது முழு மனதையும், முழு உழைப்பையும் அர்ப்பணிப்பேன். ஜோகூரின் வளர்ச்சிப் பயணம் இடைநிறுத்தப்படாமல் தொடர வேண்டுமெனில், மக்களின் நம்பிக்கையும் ஆதரவும் எனக்குத் தேவை,” என்று ஒன் ஹஃபிஸ் தனது உருக்கமான வேண்டுகோளை பதிவு செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here