மெங்களம்பு தமிழ்ப்பள்ளியின் சாதனை
ஈப்போ –
மெங்களம்பு தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர்களின் முயற்சியினாலும் உழைப்பினாலும் 5 ஆயிரம் அகல் விளக்குகளினால் தேசிய தின சின்னம் உருவாக்கப்பட்டு பள்ளியின் வரலாற்று பதிவேட்டில் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியில் நடைபெற்ற இரண்டாம் கட்ட தேசிய தினக் கொண்டாட்டத்தில் இந்த தேசிய தின சின்னத்தை பள்ளியின் தலைமையாசிரியர் சு. மாரியம்மா தொடக்கி வைத்தார்.
பள்ளியின் ஆசிரியர் ரேய்மனின் சிந்தனையில் தோன்றிய இந்த முயற்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் யமுனா காயத்திரி, நிர்மலா தேவி ஆகியோரோடு மற்ற ஆசிரியர்களும் கடந்த ஒரு வாரமாக அகல்விளக்குகளுக்கு வர்ணம் பூசுவது, சின்னத்தை உருவாக்குவது போன்ற நடவடிக்கையில் சிரமம் பாராது தங்களை ஈடுபடுத்திக்கொண்டது தன்னை நெகிழ வைத்ததாகவும் அகல் விளக்குகளின் செலவினை ஏற்றுக்கொண்ட பள்ளியின் ஆசிரியர் சாந்தி மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தாம் நன்றி கூறிக்கொள்வதாக சு. மாரியம்மா தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பள்ளியின் தொடர்புத் துறை அதிகாரி பரமசிவம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.