வாஷிங்டன்:
இதற்கிடையே கடந்த 6-ஆம் தேதி ஜோபைடனின் வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் அளிப்பதற்காக பாராளுமன்றம் கூடியது. அப்போது டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்த கலவரத்தில் 4 பேர் பலியானார்கள். ஒரு போலீஸ் அதிகாரியும் உயிரிழந்தார். இந்த கலவரத்துக்கு டிரம்ப் காரணம் என்றும் அவர் தனது ஆதரவாளர்களை தூண்டியதாகவும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து அவரை அதிபர் பதவியில் இருந்து 25- ஆவது சட்ட திருத்தத்தைப் பயன்படுத்தி நீக்க வேண்டும் என்று ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.
புதிய அதிபராக ஜோ பைடன் வருகிற 20-ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். அதற்கு முன்பாகவே டிரம்ப்பை அதிபர் பதவியில் இருந்து நீக்க ஜனநாயக கட்சியினர் தீவிரமாக உள்ளனர்.
இதையடுத்து 25-ஆவது சட்ட திருத்தத்தை ஜனநாயக கட்சியினர் கொண்டு வந்தனர். ஆனால் அதற்கு குடியரசு கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அந்த தீர்மானம் நிறைவேறவில்லை. இந்த நிலையில் ஜனநாயக கட்சியினர் 2-ஆவது முறையாக டிரம்புக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளனர். பாராளுமன்றம் இன்று கூடி அதிபருக்கான அதிகாரங்களை பறிக்க வகை செய்யும் 25ஆவது சட்ட திருத்தம் மீது முடிவெடுக்கும்.
அந்த அடிப்படையில் டிரம்பை பதவி நீக்கும் தீர்மானம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மீது பாராளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வன்முறையை தொடர்ந்து தலைநகர் வாஷிங்டனில் பொது அவசரநிலை அமல்படுத்தப்பட்டு இருந்தது.
ஜோ பைடன் அதிபராக பதவி ஏற்கும் 20-ஆம் தேதி ஆயுதங்களுடன் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்க புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் தலைநகர் வாஷிங்டனில் அவசரநிலையை அறிவித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த அவசர நிலை வருகிற 24-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வன்முறையை தடுக்கும் விதமாக டிரம்பின் ஆதரவாளர்கள் 70 ஆயிரம் பேரின் டுவிட்டர் கணக்குகளை அந்த நிறுவனம் முடக்கி உள்ளது.