-மொழிக் காப்பாளர்கள்
கோலாலம்பூர்-
தமிழ்மொழி, தமிழ்க்கல்வி, தமிழர் திருநாள், பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு ஆகியன குறித்து எழும் சர்ச்சைகைளுக்கு அதிகாரப்பூர்வ ரீதியில் குரல் கொடுப்பதற்கும் தீர்வு காண்பதற்கும் ஓர் அதிகாரப்படியான அமைப்புத் தேவை என்ற அடிப்படையில் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். ங்ரவணன் உடன் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
அமைச்சரின் அலுவலகத்தில் கடந்த மார்ச் 27ஆம் தேதி, சனிக்கிழமை நடைபெற்ற இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் 30 இயக்கங்கள் பங்கேற்றன.
மொழி சார்ந்த விவகாரங்களுக்குத் தீர்வு காண்பதற்கு மலேசிய தமிழ்மொழி காப்பகத்திற்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தரப்படும் என்று உறுதி அளித்த டத்தோஸ்ரீ சரவணன், மேற்குறிப்பிடப்பட்ட மற்ற விவகாரங்களில் தலையிடுவதற்கும் தீர்வு காண்பதற்கும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு தமிழர் அமைப்பு தேவை என்றார்.
ஆக்கப்பூர்வமான கருத்துகள், பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. சிந்திக்கத்தக்க வாதங்களின் இறுதியில் தமிழர் ஒருங்கிணைப்புப் பேரவவை என்று வழக்கறிஞரும் மலேசிய தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான எம்.கே. கணேசன் முன்வைத்த ஆலோசனை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மலேசியத் தமிழ்மொழிக் காப்பகம் அதன் நடப்புச் செயலவையினரின் ஆளுமையில் தொடர்ந்து செயல்பட வேண்டும். அதன் தலைவராக டத்தோஸ்ரீ சரவணன் இருக்க வேண்டும் என்று ஒரு வாதமும் முன்வைக்கப்பட்டது.
இதற்குப் பதில் அளித்த மஇகா தேசிய உதவித் தலைவருமான டத்தோஸ்ரீ சரவணன், கல்வி அமைச்சர் அதற்குத் தலைமை ஏற்கட்டும். நான் இணைத் தலைவராக இருக்கிறேன். இதன்வழி ஓர் அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்பாக மலேசியத் தமிழ்க் காப்பகம் விளங்கும் என்றார்.
கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் ரட்ஸி மாட் ஜிடினை விரைவில் சந்திப்பதற்குரிய ஏற்பாட்டைச் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதே சமயத்தில் சமயம், கலாச்சாரம், பண்பாடு சார்ந்த ஓர் அகண்ட அமைப்பு நமக்கு இப்போது அவசரத் தேவையாக இருக்கிறது. இவ்விவகாரம் தொடர்பில் வரக்கூடிய பிரச்சினைகள், சிக்கல்களுக்கு ஒட்டுமொத்த சமுதாயத்தின் குரலாகத் தீர்வு காண்பதற்குத் தமிழர் ஒருங்கிணைப்புப் பேரவை என்ற இந்த அகண்ட அமைப்பு ஒலிக்கும் என்று அவர் கூறினார்.
தமிழ்ச் சார்ந்த யார் யார் ஈடுபாட்டுடன் செயல்படுகிறார்களோ அவர்கள் இந்து விரோதிகள் என்று அபாண்டமாகப் பழி சுமத்தி வருகின்றனர்.
இறை மறுப்பாளர்கள் என்ற அபாண்டக் குற்றசாட்டுகளை அப்பட்டமான பொய் என்று நிரூபிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் தமிழர் ஒருங்கிணைப்புப் பேரவை சமுதாய நிகராளியாகச் ஙெ்யல்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பொங்கலுக்குச் சமயச் சாயம் பூசி தமிழர்களை அடிப்பது இனியும் தொடரக்கூடாது என்று இச்சந்திப்பில் கலந்துகொண்ட இயக்கங்களின் நிகராளிகள் வலியுறுத்தினர்.
அதன் அடிப்படையில் தமிழர் ஒருங்கிணைப்புப் பேரவை எனும் அமைப்பை நிறுவுவது என்றும் அதன் தொடக்கமாக நாட்டில் இயங்கும் தமிழ்மொழி, இலக்கியம், கலை, பண்பாடு சார்ந்த அமைப்புகளை ஒன்று திரட்டி கருத்தாய்வு மாநாடு நடத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.
நாம் சமயத்திற்கு எதிரானவர்கள் அல்லர், தமிழ்மொழிக் காப்பாளர்கள் என்கிற கருப்பொருளோடு இணைவது என்றும் அந்த உணர்வோடு மாநாட்டை முன்னெடுப்பது என்றும் முடிவானது.
பி.ஆர். ராஜன்




















