ஆடைகள் வண்ணம் அழகிய தோற்றம்
ஆயினும் வெள்ளை நிறமே ஏற்றம்!
ஓடையின் நீர்போல் ஓய்விலா துழைக்கும்,
ஓங்கு புகழின் உயர்ந்தோர் தாதியர்!
முன்களப் பணியில் முறையுடன் சேவை,
முயன்றே ஆற்றிடும் சேவையில் சிறந்தோர்!
இன்றைய தினத்தை தாதியர் தினமென (12.5.2021)
இயம்பிடச் செய்தனர் நன்மனத் தார்கள்!
வெள்ளை ஆடை தூய்மை என்பர்,
வெள்ளை உள்ளம் தாய்மைக் கென்பர்!
உள்ளம் அதுபோல் உயர்வாய் பெற்ற,
உலகத் தாருள் தாதிமை உயர்வாம்!
தாதிமை என்பது தவமென் பார்கள்,
தாதிமை என்பது தாய்மை என்பர்!
தாதிமை போல வேறெவர் உண்டு,
தாதிமை என்பது தாய்மையின் வலிமை!
வெள்ளை என்றால் உலகம் மதிக்கும்,
வெள்ளை என்றால் ஆதவன் உதிக்கும்!
வெள்ளை என்றால் உயர்ந்தோர் என்பர்,
வெள்ளை என்றால் செவிலியர்க் கழகாம்!
உண்மை நேர்மை உழைப்புடன் உயர்நெறி,
உறவிலா சேவையும் கறவிலா பணியும்;
எண்ணம் யாவும் இறைப்பணி போலும்,
இருப்போ ரெல்லாம் செவிலியர் ஆமே!
–வீர்.கா.அருண்மொழிதேவன்
(இன்று உலக தாதியர் தினம்)