புத்ராஜெயா: பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையில் பெரிக்காத்தான் நேஷனல் கட்சி தலைவர்களுடன் புதன்கிழமை (ஆகஸ்டு 11) மாலை சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் பற்றி தெரியவில்லை என்றாலும், கூட்டம் அம்னோவின் ஆதரவை பெரிக்காத்தான் கட்சி திரும்பப் பெறுவது பற்றி விவாதிக்கும் என்று நம்பப்படுகிறது.
பார்டி பிரிபூமி பெர்சாத்து மலேசியாவின் தலைவர் முஹிடினை தவிர , பாஸ் கட்சித் தலைவர், கெராக்கான் கட்சி, சபா முன்னேற்றக் கட்சி மற்றும் சபா ஸ்டார் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பு இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு திட்டமிடப்படாத சந்திப்பு என்றும் மேலும் கட்சித் தலைவர்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்டு 10) தெரிவிக்கப்பட்டதாகவும் அறியப்படுகின்றது.
ஆகஸ்டு 4 அன்று, அம்னோவின் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் இனி முஹிடின் யாசின் மற்றும் பெரிக்காத்தான் அரசாங்கத்தை ஆதரிக்கவில்லை என்று பகிரங்கமாக அறிவித்தது.
மாட்சிமை தங்கிய பேரரசருக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்பட்டியலுடன் அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி கையெழுத்திட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் PKR கட்சியும் முஹிடினின் தலைமையை எதிர்த்து தனது 35 எம்.பி.க்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கடிதத்தை பேரரசருக்கு அனுப்பியுள்ளது என்று அதன் தகவல் தொடர்பு இயக்குனர் ஃபஹ்மி ஃபாட்சில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.




















