கோலாலம்பூர்: கடந்த சனிக்கிழமையன்று சங்காட் ராஜா சுள்ளானில் உள்ள ஆடம்பர சொகுசுமாடிக்குடியிருப்பில் நடந்த, போதைப்பொருள் விருந்தில் கலந்து கொண்ட குற்றச்சாட்டில் இரு போலீஸ்காரர்கள் உட்பட 14 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கோலாலம்பூர் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறைத் தலைவர் சஹார் அப்துல் லத்தீஃப் இது பற்றிக்கூறுகையில், இரவு 9.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட ஏழு ஆண்கள் மற்றும் ஏழு பெண்களும் அடங்குவர் என்றார். அவர்கள் அனைவரும் கெத்தமினுக்கு சாதகமாக இருப்பதாக கண்டறியப்பட்டது என்று கூறினார்.
அவ்விடத்தில் கைப்பற்றப்பட்ட சுமார் 5.56 கிராம் எடையுள்ள கெத்தமின் வகை போதைப்பொருட்கள் 834 வெள்ளி மதிப்புள்ளவை என்றும் தெரிவித்தார்.
“போதைப்பொருள் விருந்தின் ஏற்பாட்டாளரான 39 வயதுடைய ஆடவர், ஒரு நாளைக்கு 220 வெள்ளி வாடகைக்கு எடுக்கப்பட்டதாக நம்பப்படும் அந்த ஆடம்பர சொகுசுமாடிக்குடியிருப்பில் கலந்து கொள்வதற்காக, விருந்தின் ஏற்பாட்டாளர் தொலைபேசி அழைப்பு மூலம் ஏனையவர்களை உல்லாச விருந்தில் கலந்து கொள்ள அழைத்தார்,” என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் கூறினார்.
சஹாரின் கூற்றுப்படி, தேசிய மீட்புத் திட்டத்தின் SOP களை மீறியதற்காக கைது செய்யப்பட்ட அனைவருக்கும் தலா 4,000 வெள்ளி அபராதத்திற்கான குற்றப்பதிவு வழங்கப்பட்டது என்றும் கூறினார்.
மேலும் “போதைப்பொருள் வைத்திருப்பதற்காக 12 (2) மற்றும் 15 (1) (a) பிரிவுகள் சம்பந்தப்பட்ட ஆபத்தான மருந்துகள் சட்டம் (ADB) 1952 இன் கீழ் அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்,” என்று அவர் கூறினார்.
“ஹோட்டல்கள், சர்வீஸ் செய்யப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கொண்டோமினியங்களின் நிர்வாகம் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை போலீசுக்கு தெரிவிக்க வலியுறுத்தப்படுகிறனர். மேலும் இது தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் கோலாலம்பூர் போலீஸ் ஹாட்லைனை 03-2115 9999 எனும் எண்ணில் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம், ”என்றும் தெரிவித்தார்.