கோலாலம்பூர், அக்டோபர் 28 :
மூன்று மாதங்களுக்கு முன்பு காஜாங்கில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தின் ஒரு அறையில் விருந்து நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட போலீஸ் நிலையத்தின் பொறுப்பாளர் (OIC) மற்றும் அவருக்குக் கீழ் பணிபுரிந்த மூன்று போலீஸ்காரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ அர்ஜுனைடி முஹமட் இதுபற்றிக் கூறுகையில், அவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் எதுவும் சுமத்தப்படாது என்றார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து புக்கிட் அமான் விசாரணை நடத்தியது. புக்கிட் அமான் நேர்மை மற்றும் தரநிலைகள் இணக்கத் துறையின் (JIPS) இயக்குநர் டத்தோ அஸ்ரி அஹ்மட் கூறும்போது, கைது செய்யப்படட நால்வர் மீதும் குற்றவியல் குற்றச்சாட்டுகளை சுமத்தாத நடவடிக்கை, துணை அரசு வழக்கறிஞர் மூலம் மேற்கொள்ளப்பட்டது என்றார்.
“நோயியல் நிபுணரின் உறுதிப்படுத்தலுக்காக நடத்தப்பட்ட இரண்டாவது சிறுநீர் பரிசோதனையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்று கண்டறியப்பட்டது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
“கோவிட்-19 நிலையான இயக்க நடைமுறைகளை மீறியதற்காக அவர்களுக்கு (நான்கு பேர்) அபராதம் விதிக்கப்பட்டது ,” என்று அவர் கூறினார்.
பொது அதிகாரிகள் (நடத்தை மற்றும் ஒழுக்கம்) ஒழுங்குமுறைகள் 1993 இன் கீழ் குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக நான்கு காவல்துறையினரும் தொடர்ந்து ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அஸ்ரி கூறினார்.
மேலும் முடிவெடுப்பதற்கு முன்னர் அவர்கள் அனைவரும் தங்கள் குற்றங்கள் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பிரதிநிதித்துவ கடிதங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.
காஜாங் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் உள்ள ஒரு அறையை பொழுதுபோக்கு மையமாக மாற்றிய பின்னர் அந்த நிலையத்தின் பொறுப்பதிகாரி , அவருக்குக் கீழ் பணிபுரிந்த மூன்று போலீஸ்காரர்கள் மற்றும் நான்கு பொதுப் பெண்களுடன் கைது செய்யப்பட்டிருந்தனர்.
போலீஸ் நிலையத்தின் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு அறையில் மதுபானம் அருந்தியும், கெத்தும் வகை போதைச் சாறு அருந்தியும் நடனமாடிக்கொண்டிருந்த போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



















