ஜார்ஜ் டவுன், நவம்பர் 23:
பினாங்கு நுகர்வோர் சங்கம் (CAP) உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் மற்றும் மத்திய வேளாண் சந்தைப்படுத்தல் ஆணையம் (FAMA) ஆகியவை சமீப நாட்களாக அதிகரித்து வரும் காய்கறிகளின் விலையை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
CAP தலைவர் மொஹிதீன் அப்துல் காதர் கூறுகையில், கடந்த இரண்டு வாரங்களில் சில காய்கறிகளின் விலை 200 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக சோதனையில் தெரியவந்துள்ளது என்றார்.
மேலும் வரும் வாரங்களில் மற்ற காய்கறிகளின் விலைகள் உயரக்கூடும் என்று விநியோகஸ்தர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் எச்சரித்ததாக பல சில்லறை விற்பனையாளர்கள் புகார் கூறியதாக அவர் கூறினார்.
“எனவே, சரக்குகளின் விலை அதிகரிப்பால் சராசரி வருமானம் ஈட்டுபவர்கள் மோசமாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதால், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் அமலாக்கப் பிரிவினர் இவ்விலையேற்றத்தை கட்டுப்படுத்த, சோதனை மேற்கொள்ள வேண்டும் என CAP அழைப்புவிடுத்துள்ளது .
“அதிகமாக விலையை உயர்த்தும் மற்றும் லாபம் ஈட்டுதல் தடுப்புச் சட்டம் 2010ஐ மீறும் வியாபாரிகள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றும் அவர் இன்று கூறினார்.
சாவி பெண்டேக்கின் (choy sum) விலை கிலோ ஒன்றுக்கு RM3ல் இருந்து RM9 ஆக விற்கப்படுவதால் 200 விழுக்காடு விலை உயர்வடைந்துள்ளது , ப்ரோக்கோலி ஒரு கிலோ RM8லிருந்து RM20 ஆகவும்- 150 விழுக்காடும் மற்றும் காலிஃபிளவரின் விலை கிலோ ஒன்றுக்கு RM7ல் இருந்து RM16 ஆகவும் 100 விழுக்காடும் விலை உயர்வு கண்டுள்ளது.
மற்றவை பீன்ஸ் (kacang buncis) ஒரு கிலோ RM8ல் இருந்து RM15 (88% அதிகரிப்பு), சாவி ஒரு கிலோ RM5ல் இருந்து RM8 (60% அதிகரிப்பு), முட்டைக்கோஸ் ஒரு கிலோ RM4ல் இருந்து RM6 (50% அதிகரிப்பு), சிவப்பு மிளகாய் ஒரு கிலோவுக்கு RM13ல் இருந்து RM19 ஆகவும் (46% அதிகரிப்பு) மற்றும் பச்சை மிளகாய் ஒரு கிலோ RM10லிருந்து RM14 ஆகவும் (40% அதிகரிப்பு).
நாட்டில் காய்கறிகளின் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகத்தை கட்டுப்பாட்டில் எடுக்குமாறு CAP பலமுறை ஃபாமாவுக்கு (Fama) அழைப்பு விடுத்ததாக மொஹிதீன் கூறினார்.
“துரதிர்ஷ்டவசமாக, எங்கள் அழைப்புகள் அவர்கள் காதுகளில் விழவில்லை ,” என்று அவர் மேலும் கூறினார்.