கூடாத், பிப்ரவரி 16 :
இங்குள்ள கம்போங் லாண்டுங் அயாங்கில், இன்று ஏற்பட்ட தீ விபத்தில் தண்ணீருக்கு மேலுள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இதுவரை, யாருக்கும் எந்த காயங்கள் அல்லது விபரீதம் எதுவும் பதிவாகவில்லை. அங்கு தீயை அணைக்கும் முயற்சிகளை மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) வேகமாக மேற்கொண்டு வருகிறது.
சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத்தின் (PGO) செய்தித் தொடர்பாளர் இதுபற்றிக் கூறுகையில், மாலை 4.26 மணிக்கு சம்பவம் தொடர்பில் தங்களுக்கு அவசர அழைப்பு வந்தது.
அவரது கூற்றுப்படி, 15 உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு இரண்டு இயந்திரங்கள் மற்றும் ஒரு அவசர சேவைகள் உதவி பிரிவு (ERMS) வேன் ஆகியவை, சம்பவ இடத்திற்கு உடனே அனுப்பப்பட்டன.
“கூடாட் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் (BBP) மற்றும் கோத்தா மருது தீயணைப்புக் குழுவின் உதவியுடன் தீயை அணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இரவு 7 மணி வரை தீயை அணைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், தீ இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், மலேசிய கடல்சார் அமலாக்க முகமை (APMM) துறையினரும் அவர்களுடன் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.