கோலாலம்பூர், பிப்ரவரி 18 :
மலேசிய சிறைச்சாலைகள் துறைக்கு, ஜப்பானிய அரசாங்கம் இன்று US$450,000 (RM1.88 மில்லியன்) மதிப்புள்ள கோவிட்-19 தடுப்புப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது.
தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் உள்ள சிறைச்சாலைகளில் நெரிசல் நிலைமைகளை நிவர்த்தி செய்வதன் மூலமும், கோவிட்-19 தொற்றினை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் சிறைச்சாலைகளை வலுப்படுத்தும் நோக்குடன் இந்த நன்கொடையை ஜப்பான் அரசு வழங்கியுள்ளது.
போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (UNODC) மூலம் மலேசிய சிறைத்துறையிடம் இந்த பொருட்கள் ஒப்படைக்கப்பட்டதாக ஜப்பானிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20,000 அலகுகள் Covid-19 அன்டிஜன் சுய பரிசோதனைக் கருவி (உமிழ்நீர்) மற்றும் 5,000 யூனிட் பிரத்தியேக ஆடை ஆகியவற்றை உள்ளடக்கிய பொருட்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது ஜப்பான், மலேசியா மற்றும் UNODC இடையே நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பின் அடையாளமாகும்.
மலேசியாவுக்கான ஜப்பான் தூதுவர் தகாஹாஷி கட்சுஹிகோ, மலேசியாவில் உள்ள UNODC அலுவலகத்தின் ஒருங்கிணைப்பாளர் அஸ்மா சைன்கவுட்ஜே ஆகியோர் மலேசிய சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் டத்தோ நோர்டின் முஹமட்டிடம் அப்பொருட்களை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.