பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 22 :
15வது பொதுத் தேர்தலில் (GE15) கிளாந்தானில் போட்டியிடும் அனைத்து பெர்சாத்து வேட்பாளர்களும் பாஸ் சின்னத்தைப் பயன்படுத்துவார்கள் என்று டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.
பெர்சாத்துவின் டத்தோஸ்ரீ முஸ்தபா முகமட் மற்றும் டத்தோஸ்ரீ இக்மால் ஹிஷாம் அப்துல் அஜீஸ் ஆகியோர் முறையே ஜெலி மற்றும் தானா மேரா நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் போது, அவர்கள் பாஸ் கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்துவார்கள் என்று பெரிகாத்தான் நேஷனல் கட்சியின் தலைவருமான அவர் கூறினார்.
இந்த விவகாரம் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்நது GE15 இல் இருவரையும் பாஸ் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க முடிவு செய்ததாகவும் அவர் கூறினார்.
GE15ல் முக்கியமானதாகக் கருதப்படும் 27 இடங்கள் உட்பட 222 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பெரிகாத்தான் நேஷனல் தனது வேட்பாளர்களை நிறுத்தும் என்றும் அவர் கூறினார்.
முஸ்தபா மற்றும் இக்மல் ஹிஷாம் ஆகியோர் பெர்சாத்துவில் சேருவதற்கு முன்பு, 14வது பொதுத் தேர்தலில் பாரிசான் நேஷனல் கட்சியின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.