பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 23 :
அடுத்த மாதம் நடைபெறவுள்ள 15வது பொதுத் தேர்தலில் (GE15) முதன் முதலாக அறிமுகமாகும் மூடா கட்சி, 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் என நம்புவதாக நெருக்கமான ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.
மூடாவின் நிறுவனர் மற்றும் தலைவருமானன சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் மூவர் தொகுதியை தற்காத்துக்கொள்வார் என்றும் அவரைத் தவிர சில புதிய முகங்கள் ஏனைய 9 தொகுதிகளில் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது.
இன்னும் ஒரு வாரத்தில் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் பக்காத்தான் ஹராப்பானுடன் ஆசன பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அவ்வட்டாரம் தெரிவித்தது.
கட்சியின் இணை நிறுவனர் ஷாரிசல், GE15 இல் போட்டியிடத் தனது விருப்பத்தையும் தயார்நிலையையும் கட்சித் தலைமையிடம் தெரிவித்ததாக, சமீபத்தில் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.