சிங்கப்பூர் ஆர்ச்சர்டு ரோட்டில் ஏராளமான இரவு விடுதிகளும், மதுபான வளாகங்களும் உள்ளது. எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இந்த பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு சம்பவத்தன்று தேவேந்திரன் சண்முகம் (வயது 34) என்பவர் சென்றார். தமிழ்நாட்டை சேர்ந்த இவர் சிங்கப்பூரில் வசித்து வந்தார்.
குறித்த வணிக வளாக படிக்கட்டில் தேவேந்திரன் சண்முகம் சென்று கொண்டு இருந்தபோது, முகமட் அஸ்பரி அப்துல் கஹா (27) என்பவருடன் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த முகமட் அஸ்பரி திடீரென தேவேந்திரன் சண்முகத்தின் நெஞ்சில் கை வைத்து கீழே தள்ளியதாகவும், இதில் படிக்கட்டில் இருந்து உருண்டு விழுந்த தேவேந்திரன் சண்முகத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இரத்த வெள்ளத்தில் கிடந்த தேவேந்திரன் சண்முகத்தை மீட்டு அங்குள்ள மருத்துவமணையில் சேர்த்தனர், ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
தேவேந்திரன் சண்முகம் என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார் என தெரியவில்லை. இது தொடர்பாக சிங்கப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.