சிங்கப்பூரின் 9ஆவது அதிபராகத் தர்மன் சண்முகரத்னம் பதவியேற்றார். அதிபராக தர்மன் சிங்கப்பூரர்களுக்கு வழங்கிய முதல் அதிகாரபூர்வ உரையில் வேற்றுமைகளால் சிங்கப்பூரர்கள் பிளவுபடக்கூடாது என்பதை வலியுறுத்தினார். சவால்மிக்க உலகத்தில் சிறந்த சமுதாயத்தை உருவாக்க இதுதான் வழி என்று தர்மன் சொன்னார்.
அதிபர் என்ற முறையில் அரசாங்கம், சமூகக் குழுக்கள், தொண்டூழிய அமைப்புகள், ஒட்டுமொத்த சிங்கப்பூரர்கள் என அனைவருடனும் சேர்ந்து இன நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும் ஒன்றுபட்ட சமூகமாகச் சிங்கப்பூரை உருவாக்கவும் தாம் உழைக்கப் போவதாகத் தர்மன் கூறினார்.
சிங்கப்பூரின் நிதியிருப்புப் பயன்பாடு, பொதுச் சேவைத் துறை நியமனம் ஆகிய விவகாரங்களில் அதிபர் ஆலோசனை மன்றத்தின் ஆலோசனைகளைத் தாம் பின்பற்றப் போவதாக அவர் உறுதியளித்தார். வெவ்வேறு சமூகங்களுக்கிடையே கலாசார அம்சங்களை நிலைநிறுத்தும் அதேநேரத்தில் அவர்கள் மத்தியில் சிறந்த பிணைப்பு ஏற்படுவதையும் தாம் உறுதிசெய்யப்போவதாக அதிபர் சொன்னார்.
உதாரணத்துக்குக் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் விளையாட்டு அல்லது கலையை மற்றொரு சமூகத்துக்கு அறிமுகப்படுத்தலாம் என்றார் தர்மன்.