ஷா ஆலம்:
அரசியல் கட்சி என்ற ரீதியில் கொள்கை வேறுபாடுகள் இருந்தபோதிலும், போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சியூ ஃபூக் மற்றும் திரெங்கானு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஹ்மட் சம்சூரி மொக்தார் ஆகியோர் மாநில மற்றும் தேசிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க கடந்த சனிக்கிழமை சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பில் முக்கியமாக பெர்மைசூரி மற்றும் ஜெர்தே ஆகிய இரண்டு நிலையங்களில் கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பு (ECRL) உட்பட, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மேம்படுவதை உறுதி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தியதாக சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான லோக் கூறினார்.
“எங்களுக்குள் அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், தொழில்முறை மற்றும் நல்ல ஆளுமை கொண்ட தலைவராக நான் அவரை மதிக்கிறேன். அவர் என்னை சந்தித்து காலை உணவை ஒன்றாக சாப்பிட அழைத்தபோது, நான் மிகுந்த சந்தோசத்துடன் ஏற்றுக்கொண்டேன்”.
மேலும் “போக்குவரத்து அமைச்சகத்தில் ECRL நெட்வொர்க் வசதிகள் பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த ஊக்கியாக இருப்பதையும், மாநில அரசின் அபிலாஷைகளுக்கு ஏற்ப திரெங்கானுவில் உள்ள தொழில்துறை பகுதிகளை மேம்படுத்த உதவுவதையும் நாங்கள் தொடர்ந்து உறுதி செய்வோம்,” என்று அவர் நேற்று பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவித்தார்.