தமிழில் ‘பருத்தி வீரன்’ படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற பிரியாமணி, தற்போது ஷாருக்கான், நயன்தாராவுடன் இணைந்து ‘ஜவான்’ படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தனது உடல் நிறத்தை வைத்து கேலி செய்தவர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
“நான் சமூக ஊடகத்தில் முக அலங்காரம் இல்லாமல்தான் புகைப்படங்களைப் பகிர்ந்தேன். அதைப் பார்த்த பலரும் நான் கருப்பாக இருப்பதாகவும் மாநிறத்தில் இருப்பதாகவும் கேலி செய்து கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். வயதான ‘ஆன்டி’ தோற்றத்தில் இருப்பதாகவும் பேசினர்.
“இதுபோல் இருந்தால்தான் என்ன? இப்போது இல்லை என்றாலும் கூட நாளை உங்களுக்கும் வயதாகி முதியவராகத்தான் போகிறீர்கள். எனக்கு இப்போது 38 வயது ஆகிறது. இந்த வயதிலும் நான் கட்டுக்கோப்பான தோற்றத்தில்தான் இருக்கிறேன். நான் எப்படி இருக்கிறேனோ அதில் எனக்கு மகிழ்ச்சிதான். பழுத்த மட்டையைப் பார்த்து குருத்து மட்டை சிரிப்பது எல்லாம் வழக்கம்தான்,’’ என்று கூறியுள்ளார்.