கெடாவில் 1,200 ஆண்டு பழமையான புத்தர் கோயில் கண்டுபிடிப்பு

கெடா:

சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெரிய புத்தர் கோவில் புக்கிட் சோராசில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேசிய மரபுடைமைத் துறையும் பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் உலக தொல்பொருள் ஆராய்ச்சி மையமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், இவை கண்டெடுக்கப்பட்டன.

இந்தோனேசியாவின் சுமத்ரா, மேற்கு ஜாவாவில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால ஸ்ரீவிஜய பேரரசின் கலைப்பொருட்களை ஒத்த வேலைப்பாடுகளைக் கொண்ட இரு புத்தர் சிலைகள் மற்றும் பழங்கால எழுத்துக்களைக் கொண்ட கல்வெட்டையும் ஆய்வாளர் டாக்டர் நாஷா ரோட்சியாடி காவ் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது.

ஆகஸ்ட் 28 அன்று தொடங்கிய இரண்டு வார அகழ்வாராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து, கிடைத்துள்ள இந்தக் கண்டுபிடிப்புகள், கோவிட்-19 தொற்றுநோய் பரவலுக்குப் பிறகு மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ள மிக முக்கியமான தொல்லியல் கண்டுபிடிப்பு என்று தேசிய மரபுடைமைத் துறை ஆணையர் முகமட் அஸ்மி முகமட் யூசோப் தெரிவித்தார்.

“பெரும்பாலான கலைப்பொருட்கள் இன்னும் சிதைவுறாமல் அப்படியே உள்ளன, கோவில் அதன் முழு அமைப்பை இன்னும் இருக்கிறது ,” என்று கூறிய அவர், கெடா மாநிலத்தின் தொல்பொருள் சுற்றுலாவுக்கு இக்கண்டுபிடிப்புகள் மேலும் புகழ் சேர்ப்பதாகக் கூறினார்.

செப்டம்பர் 8 வரை நடந்த அகழ்வாராய்ச்சி பணிகளில், கோயிலின் முழு மேற்குச் சுவரையும், அதன் வடக்கு, தெற்குச் சுவர்களில் பாதியும், அதன் அடிவாரத்தில் உள்ள படிக்கட்டு அமைப்புகளும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

“புஜாங் பள்ளத்தாக்கில் இன்னும் மேற்கொள்ளப்பட வேண்டிய அகழ்வுப் பணிகள் உள்ளன.

“இந்தக் கண்டுபிடிப்புகள் மேற்கத்திய வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை மறுபரிசீலனை செய்ய உதவும்,” என்று யுஎஸ்எம் துணைவேந்தர் பேராசிரியர் டத்தோ இர் டாக்டர் அப்துல் ரஹ்மான் முகமது கூறினார்.

இந்தக் கண்டுபிடிப்புகள் லெம்பா புஜாங்கிற்கும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பிற பண்டைய நாகரிகங்களுக்கும் இடையிலான பண்பாட்டு உறவுகள் குறித்து புதிய கேள்விகளை எழுப்பியதாக டாக்டர் நாஷா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here