MRT ரயில்களில் மகளிருக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ள ரயில் பெட்டியில் ஆண் பயணிகள் அமர்ந்திருப்பதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி, இணையவாசிகளை சினமடையச் செய்கிறது.
டிக்டாக்கில் வலம்வந்த அந்த 13 வினாடிகள் கொண்ட காணொளி, பரபரப்பான நேரம் தவிர மற்ற வேளைகளில் மகளிருக்காக ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டியில் ஆண்கள் அமர்ந்திருப்பதைக் காட்டியது. அந்த ரயில் பெட்டியில் மகளிருக்கு மட்டும் என்று குறிப்பிடும் அறிவிப்புப் பலகை இருப்பதையும் காண முடிகிறது.
டிக்டாக் பயனர் ஒருவர் அந்தக் காணொளியை எடுத்து செப்டம்பர் 19ஆம் தேதி சமூக வலைத்தளத்தில் அதைப் பதிவேற்றம் செய்தார்.
கோலாலம்பூரில் காஜாங் ரயில் பாதையில் இயங்கும் ரயில்களில் மகளிருக்காக மட்டும் ஒதுக்கப்படும் ரயில் பெட்டிகள் அண்மையில் அறிமுகம் கண்டன.
கூட்டம் நிறைந்த ரயில்களில் தாங்கள் எதிர்நோக்கும் பாலியல் தொந்தரவு குறித்து பெண் பயணிகளிடமிருந்து கிடைத்த புகார்களின் அடிப்படையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் ஆன்டனி லோக் கூறியிருந்தார்.
மகளிர் மட்டும் ஏறிச்செல்வதற்கான ரயில் பெட்டி, ரயிலின் நடுவில் அமைந்துள்ளது.
இந்நிலையில், மகளிருக்கான ரயில் பெட்டிக்குள் ஆண்கள் நுழைவதற்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இணையவாசிகள் கோரியுள்ளனர்.