நம் வயிற்றுக்குள் என்ன உள்ளதோ, அதற்கும் நம் மூளைக்கும் நேரடி தொடர்பு உள்ளது. இது குறித்து பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆராய்ச்சியில் ஈடுபடும் பேராசிரியர்கள் நமது வாய் தொடங்கி ஆசனவாய் வரையிலான அனைத்து உறுப்புமே செரிமானத்திற்கு பயன்படுவதால் அந்த அனைத்து உறுப்புகளுமே வயிற்றின் பாகங்கள் என்கின்றனர். செரிமானத்தைத் தாண்டி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதும் வயிற்றின் வேலையாக உள்ளது.
நமது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவின் சில கூறுகள், உடலின் பிற பாகங்களுக்கு சென்று சேராமல் இருப்பதை உறுதிப்படுத்துவதும் வயிற்றின் வேலை தான். இந்த வேலையை வயிறு சரியாக செய்யாமல் விட்டால், நோயை பரப்பக் கூடிய பாக்டீரியாக்கள் பிற பகுதிகளுக்கு பரவி நோய்வாய்ப்படக் கூடும்.
பல பாக்டீரியாக்களும், வைரஸ்களும் உணவு மூலமாக வயிற்றை அடையும் நிலையில் வயிற்று சுவர் பலமாக இருத்தல் அவசியம். நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முதல் பாதுகாப்பு சுவராக வயிறு விளங்குகிறது ஒரு வேளை நமது வயிறு தேவைக்கு அதிகமாக வேகமாக செயல்பட்டால் அது வீங்கிவிடும். இதனால் க்ரோன்ஸ் எனப்படும் `குடலில் கொப்பளங்கள், ஆசனவாயில் வீக்கங்களை ஏற்படுத்தும் நோய் உண்டாகும்.
வயிற்றைச் சுற்றி உள்ள நரம்புகள் மூலமாக மூளைக்கு செய்திகள் பரிமாறப்படுகின்றன. அதனால், வயிற்றில் சிக்கல் ஏற்பட்டால், அது மூளைக்கு உடனே தெரியும். இந்த இணைப்பு மிகவும் ஆழமானது என்று அண்மைய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இதில் மிகப்பெரிய நரம்பாக மூளையோடு வயிற்றை இணைப்பது வேகஸ் எனும் நரம்பு என்கிறார் ஒரு பேராசிரியர். இது இருவழி நரம்பு என்பதால் மூளையிலிருந்து வயிற்றுக்கும், வயிற்றிலிருந்து மூளைக்கும் செய்திகளை பரிமாறுகிறது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இரு பெண்கள் குழு பங்கெடுத்தது. அதில் ஒரு குழுவுக்கு புளிக்கவைக்கப்பட்ட பாலும், மற்றொரு குழுவுக்கு சாதாரண பாலும் குடிப்பதற்காக சில வாரங்கள் வழங்கப்பட்டன. இதில் புளித்த பாலை உட்கொண்ட பெண்களின் மூளையின் செயல்பாடுகள் வேகமாக இருந்தன. இதனால் புது ஆராய்ச்சிக்கான கதவுகள் திறந்துள்ளன.