ஜோகூர் :
லாட்டரிச் சீட்டில் 3.5 மில்லியன் ரிங்கிட் வென்றதாகப் பணிஓய்வு பெற்ற ஒருவரை நம்ப வைத்து, அவரிமிருந்து 2 இலட்சம் ரிங்கிட்டை பெற்றுக்கொண்டு மோசடி செய்த சம்பவம் ஒன்று சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.
குறித்த முதியவர் , தன்னிடமிருந்த வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் அந்த மோசடிக்காரர்களிடம் இழந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட 60 வயது மதிக்கத்தக்க பாதிக்கப்பட்டவருக்கு, சந்தேகநபர்கள் தாங்கள் லாட்டரிச்சீட்டு வாங்க உதவி செய்வதாகவும் இதன்மூலம் அவருக்குப் பணமழை பொழியப்போவதாகவும் தெரிவித்தனர்.
அதை அந்த ஆடவர் நம்பவில்லை. அதனால் சந்தேகப் பேர்வழிகள் அவரிடம் ஒரு துண்டுக் காகிதத்தைக் கொடுத்து, அதை அடுத்த நாள் சந்திப்பின்போது திறந்து பார்க்கும்படியும், வரும்போது ஒரு புட்டி நிறைய தண்ணீரையும் முட்டையையும் கொண்டுவரும்படியும் கூறினர்.
அடுத்த நாள் திறந்து பார்த்தபோது அதில் 3.5 மில்லியன் ரிங்கிட்டுக்கான வெற்றிபெற்ற லாட்டரி சீட்டைக் கண்டு பாதிக்கப்பட்டவர் அதிர்ச்சியடைந்தார்.
ஆனால் மோசடிப் பேர்வழிகள் தாங்கள் சில சிறப்பு வழிபாடுகள் செய்யவேண்டும் என்றும், அதற்கு 200,000 ரிங்கிட்டுக்கு மேல் பணம் செலுத்தினால் மட்டுமே அந்த லாட்டரிச் சீட்டை ஒப்படைக்க முடியும் எனவும் கூறினர்.
பாதிக்கப்பட்டவரும் அதற்கு ஒப்புக்கொண்டு பல பரிவர்த்தனைகளில் பணத்தை அவர்களுக்கு அனுப்பினார்.
பின்னர், மோசடிப் பேர்வழிகள் தொலைபேசி அழைப்பை எடுக்காதபோதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அந்த ஆடவர் உணர்ந்தார்.





















