டெல்லி: இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான யுத்தத்தில் பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் பாலஸ்தீனம் சுதந்திர நாடாக மாற வேண்டும் என்றால் இந்த ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை முக்கிய யோசனை வழங்கி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இன்று 6 ஆவது நாளாக யுத்தம் நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பாலஸ்தீனத்தின் காசா பகுதியாகும். இந்த இடம் தற்போது ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த இடத்தை கைப்பற்ற இஸ்ரேல் முயற்சிக்கிறது. இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே மோதல் என்பது நடந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது 5 ஆயிரம் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
தற்போது வரை 2000க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இன்னும் மோதல் நீடிப்பதில் பலி எண்ணிக்கை என்பது இன்னும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. தற்போது காசாவை முற்றுகையிட்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இருட்டில் மக்கள் வசிக்கும் நிலையில் உணவு, மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் மோதல் தொடங்கி நாளிலேயே இதனை பிரதமர் மோடி வெளிப்படையாக அறிவித்தார். சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசி இந்தியா இஸ்ரேலுடன் இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அரிந்தம் பாக்சி கூறியதாவது:
பாலஸ்தீனம் சுதந்திர நாடாக செயல்பட இந்தியா தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. பாலஸ்தீனத்தை பொறுத்தவரை இஸ்ரேலுடன் இணைந்து பாதுகாப்பான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எல்லையை பகிர்ந்து கொள்ள வேண்டும். எல்லை பகுதியை நிர்ணயம் செய்து சுதந்திரமான நாடாக பாலஸ்தீனம் செயல்பட இஸ்ரேலுடன் மீண்டும் நேரடி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என இந்தியா பரிந்துரை செய்கிறது. அதேவேளையில் பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்த்து போராட வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது.




















