புத்ராஜெயா:
பாலஸ்தீன மக்களின் துன்பத்தைப் போக்க மலேசியா RM100 மில்லியன் நன்கொடை அளிக்க இலக்கு கொண்டுள்ளது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
இதன் தொடக்கமாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மலேசியா மடானி பட்ஜெட் 2024ஐ தாக்கல் செய்தபோது, பாலஸ்தீனத்துக்காக மலேசியாவின் அர்ப்பணிப்பை RM10 மில்லியன் நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார்.
இன்று புத்ரா மசூதியில் 2023 ஆம் ஆண்டுக்கான பிரீமியர் வேர்ல்ட் நன்கொடைத் திட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது, “பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிப்பதற்காக நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய நன்கொடைத் தொகையான 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.
காசாவில் ஆளும் அதிகாரம் தொடர்பில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் சம்பந்தப்பட்ட பாலஸ்தீனத்தில் நடைபெறும் சமீபத்திய மோதல்கள் கடந்த அக்டோபர் 7 முதல் நடந்து வருகிறது. இதனால் இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.
காசாவில் நடந்து வரும் வன்முறை மற்றும் போரை நிறுத்துமாறு அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்துவடன் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலை (UNSC) அக்டோபர் 9 அன்று மலேசியா வலியுறுத்தியதாக ஜாஹிட் கூறினார்.