DXN Holdings Berhad குழுமம் 30ஆம் ஆண்டு நிறைவு விழாவை அண்மையில் DXN Cybervilleஇல் கொண்டாடியது. இந்த நிறுவனம் 1993ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. உணவு, பான தொழில்துறையில் இந்நிறுவனம் அனைத்துலக ரீதியில் செயலாற்றுகின்றது.
இந்நிலையில் இந்த நிறுவனம் இவ்வாண்டு மே 19ஆம் தேதி புர்ஸா மலேசியா பங்குச் சந்தையின் முதன்மை வாரியத்தில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஏறத்தாழ 184 நாடுகளில் 16 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டு விரிவான தொடர்பினை வைத்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் அனைத்துலக ரீதியில் இந்நிறுவனம் சுகாதாரம், வர்த்தகம் சார்ந்த அமைப்புகளிடம் இருந்து பல அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
இது குறித்துப் பேசிய இந்தக் குழுமத்தின் தோற்றுநரும் நிர்வாகத் தலைவருமான டத்தோ லிம் சியூ ஜின், சீகாதாரத் துறையில் நிலையான – ஆக்கப்பூர்வமான தீர்வுகளைத் தொடர்ந்து வழங்கும் நோக்கில் DXN குழுமம் நவீன மருத்துவங்களுக்கு ஏற்ப பாரம்பரிய மருந்து வகைகளை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளை முன்னெடுக்க தகுதிபெற்ற நிபுணத்துவ அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றுகின்றது எனக் குறிப்பிட்டார். கடந்த 2 மாதங்களில் இந்நிறுவனம் யூத்தார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பாரம்பரிய மருந்து வகைகளின் மேம்பாடு, ஆய்வினை மேற்கொண்டு வருகின்றது என்றார் அவர்.
மேலும் சைபைர்ஜெயா பல்கலைக்கழகத்துடன் இணைந்து கானோடெர்மா தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே இந்த 30ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் சுற்றுலா அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் அமார் காபார் சிறப்புப் பிரமுகராகக் கலந்து கொண்டார். இந்நிறுவனம் சிறந்து விளங்குவதற்கு கடந்த 30 ஆண்டுகளாக அயராது உழைத்த நிர்வாகத்தினர், தொழிலாளர்கள் அனைவரையும் அவர் தமதுரையில் பாராட்டினார்.