பெட்டாலிங் ஜெயா:
அடுத்த ஆண்டு ஆரம்பிக்க உத்தேசித்திருக்கும் தேசிய சேவைப் பயிற்சித் திட்டம் (PLKN) செயல்படுத்தப்பட வேண்டுமானால், 2007ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்தவர்கள் மட்டுமே அதற்கு அழைக்கப்படுவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பயிற்சியாளர்கள் அவர்கள் பிறந்த ஆண்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று இன்று (நவம்பர் 3) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
“தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்கள் சரியான காரணங்களுக்காக தேசிய சேவைப் பயிற்சியில் பங்கேற்க முடியாவிட்டால், அவர்கள் ஒத்திவைக்க விண்ணப்பிக்கலாம். அதேநேரத்தில் “பயிற்சி பெறுவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.