காஸாவில் ஹமாஸ் கிளர்ச்சிக் குழு பிணை பிடித்து வைத்திருப்போரில் 54 பேர் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள் என்று இஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து வெளியுறவு அமைச்சு அந்தத் தகவலைச் சரிபார்ப்பதாக The Guardian செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
பிணையாளிகளை விடுவிக்கப் பேச்சுவார்த்தை நடத்தக் குழு ஒன்றை அமைத்திருப்பதாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் பார்ன்பிரீ பஹித்தா-நுகாரா குறிப்பிட்டார்.
இஸ்ரேலிய வேளாண்மைத் துறையில் தாய்லாந்தைச் சேர்ந்த சுமார் 30,000 பேர் வேலை செய்கின்றனர்.
ஹமாஸிடம் உள்ள 220 பிணையாளிகளில் 138 பேர் வெளிநாட்டுக் கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் என்று இஸ்ரேலிய அரசாங்கம் முன்னர் குறிப்பிட்டிருந்தது . அவர்களில் பலருக்கும் இஸ்ரேலியக் குடியுரிமையும் உண்டு என்று நம்பப்படுகிறது.
ஆனால் தாய்லாந்து, நேபாள மக்களிடம் இஸ்ரேலியக் குடியுரிமை கிடையாது. இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள தனது குடிமக்கள் சுமார் 8,000 பேர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்திருப்பதாகத் தாய்லாந்து வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.