கோலாலம்பூர்:
கடந்த நவம்பர் 3ஆம் தேதி வரை, வெளிநாட்டு வேலை மோசடியில் சிக்கிப் பாதிக்கப்பட்ட 518 மலேசியர்களை வெளியுறவு அமைச்சகம் வெற்றிகரமாக வீட்டுக்கு அழைத்து வந்துள்ளது.
இந்நிலையில் மியன்மாரில் வேலை மோசடியில் சிக்கியுள்ள மேலும் 26 பேரை அடையாளம் காணும் பணியில் விஸ்மா புத்ரா தற்போது ஈடுபட்டுள்ளதாக வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டத்தோ முகமட் ஆலமின் இன்று மக்களவையில் தெரிவித்தார்.
தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் அரசாங்கங்களுடன் ஏற்கனவே ஒத்துழைத்தது போல, பாதிக்கப்படடவர்களை அடையாளம் காண நாம் மியன்மாரின் யாங்கூனில் உள்ள மலேசியத் தூதரகம் மூலம் அந்நாட்டுடனும் பணியாற்றி வருகிறோம் என்று, இன்று நாடாராளுமன்றத்தில் ஆஸ்கார் லிங் சாய் இயூ (PH-Sibu) ன் கேள்விக்கு பதில் அளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் வேலை மோசடியால் பாதிக்கப்பட்டவர்களில் 704 பேர் தொடர்பான விவரங்கள் உத்தியோகபூர்வமாக அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், அத்தரவுகளின் அடிப்படையில் கண்டறியப்பட்டவர்களில், இன்னும் 186 நபர்கள் இன்னும் வீட்டிற்கு அழைத்து வரப்படவில்லை,” என்றார்.
பாதிக்கப்பட்டவர்களை மீட்க விஸ்மா புத்ரா அனைத்து தரப்பினரிடமிருந்தும் ஒத்துழைப்பைக் கோர விரும்புகிறது. எனவே உங்களிடம் ஏதேனும் தகவல் இருந்தால், தயவுசெய்து அதை எங்களுக்கு வழங்குங்கள் என்றும் அவர் கூறினார்.
இப்பிரச்சினையைத் தடுக்க அமைச்சகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் உறுதியளித்தார். மேலும் தற்போது மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படாது என்றார். ஏனெனில் இது விசாரணைகள் மற்றும் எங்களின் தற்போதைய முயற்சிகளுக்கு இடையூறு விளைவிக்கும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.