புத்ராஜெயாவில் நடத்தப்பட்ட சோதனையில் ஆவணமற்ற 377 வெளிநாட்டவர்கள் கைது

கோலாலம்பூர்:

ஜாலான் புத்ராஜெயா, புத்ராஜெயாவைச் சுற்றி இன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கையில் மொத்தம் 377 சட்டவிரோத குடியேறிகளை குடிநுழைவுத்துறை கைது செய்துள்ளது.

மலேசிய போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது என்றும், சம்பந்தப்பட்ட இரண்டு துறைகளைச் சேர்ந்த 150 அதிகாரிகள் இதில் ஈடுபட்டதாகவும் குடிநுழைவுத் துறையின் இயக்குநர் ஜெனரல் டத்தோ ரஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையில் காஜாங் மற்றும் பாங்கி திசையில் இருந்து புத்ராஜெயாவிற்குள் நுழையும் பிரதான சாலையில் JPJ மற்றும் JIM ஆகிய இரண்டு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வுக்கான நிறுத்தும் இடங்களை ஏற்படுத்தியிருந்தனர் என்று அவர் கூறினார்.

“இந்த நடவடிக்கையில், மொத்தம் 600 வெளிநாட்டினர் ஆய்வு செய்யப்பட்டனர், அதில் பல்வேறு குடிநுழைவுக் குற்றங்களுக்காக 25 முதல் 55 வயதுக்குட்பட்ட 377 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர் என்று அவர் கூறினார்.

“கைது செய்யப்பட்டவர்களில் 250 பெண்கள் மற்றும் 127 ஆண்கள் உள்ளனர் என்றும், அவர்கள் பங்களாதேஷ், நேபாளம், மியன்மார், இந்தோனேசியா, பாகிஸ்தான், இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் ” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

செல்லுபடியாகும் பாஸ்போர்ட் அல்லது அடையாள ஆவணம் இல்லாமல் ஒரு தொழிலாளியின் வாகனம் அல்லது பேருந்தில் ஏறிச் சென்றதாக அவர்களுக்கு எதிராக பொதுமக்களிடமிருந்து கிடைத்த புகாரைத் தொடர்ந்து அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று ரஸ்லின் கூறினார்.

“அனைத்து கைதிகளும் விசாரணை மற்றும் மேலதிக நடவடிக்கைகளுக்காக சிலாங்கூரில் உள்ள செமினி குடிநுழைவு தடுப்பு முகாமில் வைக்கப்படுவார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here