மூவார்:
பாரிட் ஜாவா, ஜாலான் பாரிட் லிம்போங் டாராட்டில் இளைஞர் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் சறுக்கி பள்ளத்தில் கவிழ்ந்ததில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் நடந்த இந்த விபத்தில், பாதிக்கப்பட்ட முகமட் ஹஃபிஸ் முகமட் அலி (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவர் ஸ்ரீ தஞ்சோங்கிலிருந்து பாரிட் ஜாவாவுக்குப் பயணித்தபோது, விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக மூவார் மாவட்ட காவல்துறைத் தலைவர் துணை ஆணையர் ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அஜீஸ் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்தனர், இருப்பினும் அவர் நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது.
பின்னர் பாதிக்கப்பட்டவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக பாத்திமா சிறப்பு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இந்த வழக்கு 1987 சாலைப்போக்குவரத்து சட்டம் பிரிவு 41(1) கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.



















