புதுடெல்லி:
2,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் ஜெய்ப்பூரில் தலைமறைவாக இருந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டெல்லியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்திய அதிரடி சோதனையில் பல கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதைப்பொருள் கண்டறியப்பட்டது. டெல்லியில் இருந்து சூட்டோ பெட்டரின் என்கிற போதைப்பொருளை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு தனது உணவுப் பொருள் ஏற்றுமதி குடோனில் இருந்து சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் அனுப்பி வைத்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக் மீது வழக்குபதிவு செய்ததையடுத்து தி.மு.க. அயலக அணி பொறுப்பில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
கடந்த சில ஆண்டுகளாகவே போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ள ஜாபர் சாதிக் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் போதைப்பொருட்களை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியானது.