நாட்டில் பிரபலமான சமூக சேவையாளர் டத்தோ காந்தராவ் தலையிலான மலேசிய தெலுங்கு அறக்கட்டளைக்கு 30,000 வெள்ளி மானியம் வழங்குவதாக மனிதவள அமைச்சர் வ சிவகுமார் அறிவித்தார்.
தமிழ்ப் பள்ளிகள், வசதி குறைந்த மக்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் தன்னலம் கருதாமல் உதவி வரும் மலேசிய தெலுங்கு அறக்கட்டளை தொடர்ந்து சேவையாற்ற இந்த 30,000 வெள்ளி மானியத்தை வழங்குவதாக அவர் சொன்னார்.
நேற்று டமான்சாரா காமன்வெல்த் கிளப்பில் மலேசிய தெலுங்கு அறக்கட்டளை ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி உபசரிப்பில் செலாயாங் சுவீட் கேர் இல்லத்தை சேர்ந்த 16 பிள்ளைகளுக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் மாணவி ஒருவருக்கும் கல்வி நிதி வழங்கப்பட்டது.
இந்த விழாவுக்கு தலைமை ஏற்ற அமைச்சர் சிவகுமார், இனம் பாராமல் அனைத்து இன மக்களுக்கும் சேவையாற்றிக் கொண்டிருக்கும் மலேசிய தெலுங்கு அறக்கட்டளை சேவைகளை வெகுவாக பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவைத் தலைவர் டத்தோ சுப்ரா ரத்னவேல், மலேசிய இந்தியர் சிறு வணிக சம்மேளனத்தின் தலைவர் டத்தோ ஆர். இராமநாதன், மனித வள அமைச்சின் சொக்சோ அதிகாரி மகேசன் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.