கோலாலம்பூர்:
இன்று புதன்கிழமை (நவம்பர் 22) காலை 8 மணி நிலவரப்படி, மூன்று மாநிலங்களில் உள்ள 38 வெள்ள நிவாரண மையங்களில் மொத்தம் 5,202 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் காரணமாக தங்களது வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை தெரெங்கானு மற்றும் கிளந்தானில் அதிகரித்துள்ளதுடன் பேராக்கில் மாறாமல் உள்ளது.
திரெங்கனுவில், வெள்ளம் பாதித்த ஆறு மாவட்டங்களில் நிலைமை மோசமடைந்துள்ளது, நேற்று இரவு 4,476 ஆக இருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 4,787 ஆக அதிகரித்தது என்று தெரெங்கானு மாநில பேரிடர் மேலாண்மை குழு செயலகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், publicinfobanjir.water.gov.my/aras-air இணைய தளத்தின்படி, கம்போங் புக்கிட்டில் உள்ள சுங்கை நெருஸ், கம்போங் பெசூட்டில் உள்ள சுங்கை செத்தியூ மற்றும் ஜம்படான் பெர்மைசூரியில் உள்ள சுங்கை செத்தியூ, பாடாங் கெமுண்டிங்கில் உள்ள பாரிட் உத்தாமா ஆகியவற்றில் நீர்மட்டம் எச்சரிக்கை அளவில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சுங்கை கோலா நெருஸ் அபாய அளவைத் தாண்டியுள்ளது.
கிளந்தானில் , நேற்றிரவு 80 குடும்பங்களைச் சேர்ந்த 316 பேர் இருந்த நிலையில், இன்று புதன்கிழமை காலை 97 குடும்பங்களைச் சேர்ந்த 376 பேராக அதிகரித்துள்ளது என்று, சமூக நலத் துறையின் (JKM) பேரிடர் தகவல் போர்ட்டலில் தெரிவித்துள்ளது.
மேலும் ரந்தாவ் பஞ்சாங்கில் உள்ள சுங்கை கோலோக்கில் நீர் மட்டம் அபாய அளவைத் தாண்டியுள்ளது.
பேராக்கில், கெரியானில் உள்ள அலோர் பொங்சுவில் உள்ள நிவாரண மையத்தில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் இன்னமும் நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர்.