புத்ரா ஜெயா:
பினாங்கு மாநிலத்தில் தமிழ்ப் பள்ளிகளுக்கான செந்தமிழ் விழாவில் கடவுள் வாழ்த்து, தமிழ் வாழ்த்து மற்றும் திருவள்ளுவர் படத்திற்கு தடை விதிக்கப்பட்ட சம்பவத்தை கடுமையாக கண்டிக்கிறேன் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.
மலேசிய நாட்டின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மற்றும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த போது திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.
அவரின் தலைமையிலான மடானி அரசாங்கத்திற்கு இழுக்கை தேடித் தரும் வகையில் பினாங்கு மாநில சம்பவம் அமைந்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ் வாழ்த்து, கடவுள் வாழ்த்து மற்றும் திருவள்ளுவர் படத்திற்கு கல்வி அமைச்சு எவ்வித தடையும் விதிக்கவில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக் இந்த விவகாரத்தை மிகவும் கடுமையாக கருதுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் நாட்டில் இனி இடம் பெற கூடாது. இந்தியர்களின் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, கடவுள் வாழ்த்து மற்றும் திருவள்ளுவர் படம் இடம் பெறுவது பாரம்பரியமாகும். ஆகவே சம்பந்தப்பட்ட தரப்புக்கு எதிராக குறிப்பாக தடை விதித்த அதிகாரி மீது கல்வி அமைச்சு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.






















