ஜார்ஜ் டவுன்:
பினாங்கு குடிநுழைவுத் துறையினர் நேற்று பாயான் பாருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடத்திய சோதனையில், சட்டவிரோத வெளிநாட்டு தொழிலாளர் அட்டைகள் (I-Kad), கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியம் (CIDB) அட்டை மற்றும் பாகிஸ்தான் அனைத்துலக ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றைச் செயலாக்குவதற்கான மையத்தை கண்டுபிடித்தனர்.
பாயான் பாருவில் உள்ள பெர்சியாரான் மாயாங் பாசீர் 5ல் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகளை திணைக்களம் சோதனை செய்த பின்னர், அப்பகுதியில் வெளிநாட்டினர் இருப்பதாகவும் சட்டவிரோத செயலில் ஈடுபடுவதாகவும் பொதுமக்களின் புகார்கள் மற்றும் உளவுத்துறையினர் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் நள்ளிரவு 12.30 மணியளவில் நடந்த சோதனை நடவடிக்கையில், புகார் அளிக்கப்பட்ட 11 யூனிட் வீடுகளில் 33 பேரை தாம் சோதனை செய்ததாகவும், அவர்களில் ஐந்து வெளிநாட்டு தொழிலாளர்கள் பல்வேறு குடியேற்ற குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் மாநில குடிநுழைவுத் துறை இயக்குநர் ஷா நோர் ஷாபுதீன் கூறினார்.
அவர்களில் ஒரு மியன்மார் நாட்டுப் பெண், ஒரு மியன்மார் ஆண் மற்றும் மூன்று பாகிஸ்தானிய ஆண்கள் அடங்குவர். கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணைக்காக ஜூருவில் உள்ள குடிநுழைவு தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டதாக ஷா நோர் கூறினார்.
“நாட்டில் உள்ள சட்டவிரோத வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் அவ்வப்போது இதுபோன்ற நடவடிக்கைகள் நடத்தப்படும்” என்று அவர் மேலும் கூறினார்.
சட்டவிரோத வெளிநாட்டுப் பணியாளர்கள் குறித்து தகவல் அறிந்தவர்கள், தமது துறைக்கு தேவையான தகவல்களை வழங்க முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.