நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் பெர்லினில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. இந்த செய்தி படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
’கூழாங்கல்’ படத்தை இயக்கிய பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் அடுத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கொட்டுக்காளி’. இந்தப் படத்தில் நடிகர் சூரி, அன்னா பென் உள்ளிட்டப் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்போது, இந்தப் படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக அரங்கில் ப்ரீமியர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் முதல் தமிழ்த்திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கூறும்போது, ”இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் கொடுத்திருக்கும் ஒரு அற்புதமான படைப்பை நாங்கள் தயாரித்ததில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம்.
பெர்லின் சர்வதேச திரைப்பட விழா என்பது உலகத் திரையுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இடம். மேலும், வரவிருக்கும் ஆண்டுகளில் நாம் மறக்க முடியாத பெருமைமிகு நினைவாகவும் இது இருக்கும்” என்றார்.





















