மோசமான வானிலை; 3வது நாளாக தூத்துக்குடியில் விமான சேவைகள் ரத்து

தூத்துக்குடியில் கனமழை ஓய்ந்த போதும், வானிலை முழுமையாக சீரடையாததால், தூத்துக்குடி விமான நிலையத்தில் 3 வது நாளாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நாள்தோறும் 3 விமானங்கள் புறப்பட்டு சென்று திரும்ப வரும். ஆனால் கனமழை காரணமாக கடந்த 2 நாட்களாக தூத்துக்குடிக்கு செல்லும் அனைத்து விமானங்களும், அங்கிருந்து கிளம்பும் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வந்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை சற்று ஓய்ந்துள்ள போதும் தூத்துக்குடியில் வானிலை முழுமையாக சீரடையவில்லை.

இதனால் 3வது நாளாக இன்றும் தூத்துக்குடிக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து கிளம்பும் விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அருகே நிலவிவரும் கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது.

இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதன் காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here