மெர்சிங்:
வெள்ளத்தில் மூழ்கிய சாலையின் வழியாக வேலைக்குச் சென்ற ஆடவர் ஒருவர், பலத்த நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அவ்வட்டார மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று காலை 7.19 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக மெர்சிங் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நிலையத் தலைவர் அப்துல் முயிஸ் முக்தார் கூறினார்.
மெர்சிங்கைச் சேர்ந்த 23 இளைஞர், மோட்டார் சைக்கிளில் ஜோகூருக்கு வேலைக்கு செல்ல முயன்றபோது, ஜாலான் ஜெமாலுவாங்- கோத்தா திங்கி சாலை வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருப்பதைக் கண்டார். இருப்பினும் அவர் வெள்ளத்துக்குள் பயணிப்பதற்கு முடிவு செய்து, சாலையில் சென்றபோது அவரது மோட்டார் சைக்கிளினின் இயந்திரம் திடீரென நின்றது. இதனால் அவர் வெள்ளத்திலிருந்து வெளியேற முடியாது சிக்கித் தவித்தார்.
இருப்பினும் அவர் 1.5 மீட்டர் ஆழமான பலமான நீரோட்டத்தால் 7 மீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்டார். அதிஷ்டவசமாக மீட்பு குழு அங்கு செல்லும்வரை அங்கிருந்த ஒரு மின்கம்பத்தை பிடித்துக்கொண்டு நின்றார் என அப்துல் முயிஸ் கூறினார்.