கோலாலம்பூர்:
நாட்டின் 17வது மாமன்னராக சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் இன்று தனது ஆட்சியைத் தொடங்குகிறார்.
16வது பேரரசராக இருந்த மாட்சிமை தங்கிய பகாங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மாண்புமிகு சுல்தான் இப்ராஹிம் நாட்டின் பேரரசராக பதவி வகிப்பார்.
அக்டோபர் 27, 2023 அன்று நடைபெற்ற ஆட்சியாளர்கள் மாநாட்டின் 263வது சிறப்பு கூட்டத்தின் மூலம் சுல்தான் இப்ராஹிம் 17வது மாமன்னராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்று நடைபெறுகின்ற பேரரசர் பதவியேற்பு விழாவில் 30,000 க்கும் மேற்பட்ட ஜொகூரியர்கள் ஜோகூர் பாருவில் உள்ள இஸ்தானா புக்கிட் செரீனில் இருந்து செனாய் அனைத்துலக விமான நிலையம் வரை ஜோகூர் சுல்தானுக்கு பிரியாவிடை வழங்குவதற்காக வரிசையாக அணிவகுத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பெர்மைசூரி ஜோகூர் ராஜா ஜரித் சோபியா சுல்தான் இட்ரிஸ் ஷா நேற்று தலைநகருக்குப் புறப்பட்டார், அவருடன் பேரரசரின் மகன் துங்கு புத்ரா ஜோகூர் துங்கு அபு பக்கர் சுல்தான் இப்ராகிமும் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.